சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் ; ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்தச் சங்கம், சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, முன்மொழியப்பட்ட திருத்தம் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதிய கலந்தாலோசனை இன்றி இதனை அவசரமாக அமுல்படுத்தக் கூடாது என்றும் தனது கவலைகளை முன்வைத்தார்.
மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன, பேராசிரியர் சாவித்திரி குணசேகர மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தியதுடன், தலைவர் ரஜீவ் அமரசூரிய மேலதிக அவதானிப்புகளையும் முன்மொழிவுகளையும் வழங்கினார்.
எனினும், ஜனாதிபதி செயலகத்தினால் இதுவரை சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரியவின் ஆரம்ப உரையின் பதிவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பெரிய பகுதி தெளிவற்றதாக இருப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, சந்திப்பில் இடம்பெற்ற அனைத்து தலையீடுகள், அவதானிப்புகள் மற்றும் பதில்களை உள்ளடக்கிய திருத்தப்படாத முழுமையான காணொளிப் பதிவை உயர்தர ஒலியமைப்புடன் வழங்குமாறு கோரி ஆகஸ்ட் 14 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, சங்கத் தலைவரின் உத்தியோகபூர்வ உரையின் திருத்தப்படாத பதிவு ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன், ஏனைய பங்கேற்பாளர்களின் உரைகள் அடங்கிய பதிவுகள் தேவையான உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு விரைவில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுத்தும் எஞ்சிய பதிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.