இண்டிகோ விமானம் ரத்து; ஊழியர்களுடன் பெண் பயணி ரகளை
இந்தியாவின் ஒடிசா மாநில புவனேஸ்வர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், விமான நிலைய ஊழியர்களுடன் தகராாரில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண், லக்கேஜ் பெல்ட் மீது ஏறி மேசையிலிருந்த ஆவணங்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.
அவரின் குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பயணி தெரிவித்த போதிலும், மற்றவர்கள் கொடுத்த தண்ணீரை அவர் மறுத்துவிட்டார். விமான நிலைய சொத்துகளை சேதப்படுத்தியதால் சிஐஎஸ்எப் பாதுகாப்பு படையினர் தலையிட்டு அவரை அமைதிப்படுத்தினர்.
இதற்கிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மேலும், விமான நிலைய சொத்துகளை சேதப்படுத்திய அந்த பெண் விதிமுறைகளின்படி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்வது தவறு என்றும், விமான சேவை ரத்து குறித்த கோபத்தை ஊழியர்கள் மீது காட்டக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.