இஸ்லாமாபாத்தில் ரத்தக்கறை படிந்த புத்தக பைகள்; உலகை உலுக்கும் ஈரானின் செயல் !
இஸ்லாமாபாத் மாநாட்டு அரங்கிற்கு வெளியே இரத்தம் படிந்த பள்ளிப் பைகள் புகைப்படங்கள், ஈரானில் ஈவிரக்கமின்றி அமெரிக்க இஸ்ரேல் கூட்டுட் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று (ஏப்ரல் 11, 2026) அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி மாநாடு நடைபெற உள்ளது.

168 குழந்தைகளின் உயிர்களுக்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகிறது
இந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, ஈரானியத் தரப்பிலிருந்து ‘Minab-168’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இது வெறும் வார்த்தையல்ல, கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 168 பிஞ்சு குழந்தைகளின் நினைவாக வைக்கப்பட்ட குறியீடாகும்.
எங்கள் கைகள் இப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளன; ஈரான் உயர் தலைவர் சபதம்! புஸ்வானமாகுமா பேச்சுவார்த்தை!
பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு முன், அமெரிக்கா செய்த இந்த ‘மன்னிக்க முடியாத’ குற்றத்தை உலகிற்கு நினைவூட்டுவதே ஈரானின் நோக்கம். மினாப் பகுதியில் உள்ள ‘ஷஜரே தய்யிபே’ (Shajareh Tayyebeh) என்ற சிறுமிகள் பள்ளியின் மீது மூன்று ஏவுகணைகள் விழுந்ததில், சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் உடல் சிதறிப் பலியாகினர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தை ‘Minab-168’ என்ற குறியீடு மூலம் ஈரான் தற்போது ஒரு சர்வதேச அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அமைதி பற்றிப் பேசுவதற்கு முன், இந்தப் 168 குழந்தைகளின் உயிர்களுக்கு அமெரிக்கா என்ன பதில் சொல்லப் போகிறது?” என்ற கேள்வியை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் எழுப்பியுள்ளார்.
இந்தப் போர் 40 நாட்களைத் தாண்டியுள்ள நிலையில், ஈரானின் இந்தத் திடீர் ‘உளவியல் போர்’ அமெரிக்கக் குழுவினருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத் வந்தடைந்த நிலையில், நகரெங்கும் ஈரானிய ஆதரவாளர்கள் இந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட புகைப்படங்களை ஏந்திப் போராடி வருகின்றனர்.
ராணுவ ரீதியாக அமெரிக்காவை எதிர்க்க முடியாவிட்டாலும், இத்தகைய உணர்ச்சிகரமான ‘சிம்பாலிசம்’ (Symbolism) மூலம் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட ஈரான் முயல்கிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான மனநிலையைத் தூண்ட ‘Minab-168’ ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது.
அமெரிக்கா இந்தத் தாக்குதலை ஒரு “துரதிர்ஷ்டவசமான விபத்து” என்று கூறி வரும் நிலையில், ஈரான் இதனை ஒரு “திட்டமிடப்பட்ட படுகொலை” என்றே சாடுகிறது. இன்று மதியம் தொடங்க உள்ள பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்துப் பேசப்பட வேண்டும்.
ஆனால், ‘Minab-168’ விவகாரம் முன்னிலைக்கு வந்துள்ளதால், ஈரான் முதலில் அமெரிக்காவிடம் பகிரங்க மன்னிப்பு அல்லது இழப்பீடு கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் பிஞ்சு குழந்தைகளின் ரத்தக்கறை படிந்த புத்தகங்களின் புகைப்படங்கள் இஸ்லாமாபாத் மாநாட்டு அரங்கிற்கு வெளியே திரையிடப்பட்டுள்ளன. ஈரானின் இந்தத் துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான நகர்வு, அமைதிப் பேச்சுவார்த்தையின் போக்கை முற்றிலும் மாற்றக்கூடும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர்.