இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து
இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துக்குச் சென்ற சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே இந்த முடிவுக்கான பிரதான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த சில பிக்குகள் குஷ் எனப்படும் போதைப்பொருளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை கருத்திற்கொண்டே இலங்கையர்களுக்கான இலவச விசா வசதியை இரத்து செய்ய தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்குப் பயணம் செய்யும் இலங்கைப் பிரஜைகள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு தாய்லாந்து தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் தாய்லாந்துடன் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா இல்லா பயண வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.