நாடு முழுவதும் பலத்த காற்று எச்சரிக்கை ; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுரை
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இது தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளதுடன், இது இன்று (15) இரவு 08.30 மணி வரை செல்லுபடியாகும்.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வட மாகாணம், வடமத்திய மாகாணம், திருகோணமலை மாவட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இது தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.