சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் போது இரு தரப்பினதும் சமர்ப்பணங்கள் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிணை உத்தரவைப் பிரகடனப்படுத்துவதை நீதவான் ஒத்திவைத்தார்.
இதற்கமைய, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் ஆராயப்பட்டு, 17 பக்கங்களைக் கொண்ட பிணை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர், சாகர காரியவசத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாகச் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.
குறித்த விசாரணை தொடர்பான செய்திகள் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காகச் சாகர காரியவசத்தை இன்று (10) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, இன்று முற்பகல் அப்பணியகத்திற்கு வருகை தந்த சாகர காரியவசமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.