இறுதி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டி... இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
பங்களதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதன்படி இன்றையதினம் இடம்பெற்ற முதல் டி20 போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 61 ஓட்டங்களை, குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 207 ஓட்டங்களி வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜாக்கர் அலி 68 ஓட்டங்களையும், மஹ்முதுல்லாஹ் 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.