தமிழர் பகுதியில் நண்பனின் பிறந்த நாளுக்கு காண சென்ற இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!
மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கி பரிதாபாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை (04-03-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு காண வருகை தந்த நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன்போது மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும், மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.