மட்டக்களப்பில் தப்பியோடிய தவிசாளர், ஒருவர் கைது ; சூடுபிடிக்கும் தொல்பொருள் பலகை விவிகாரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சந்தேக நபர்களால் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் குழுக்கள்
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருட்கள் உள்ள இடங்களுக்கான திசைகளைக் காட்டும் வகையில் திசைப் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவும் பணியை கடந்த நவம்பர் 3ஆம் திகதி ஆரம்பித்திருந்தது.
அதன் பின்னர், பிரதேச சபை ஒன்றின் அதிகாரிகளினால் இப்பலகைகள் கடந்த 22ஆம் திகதி அகற்றப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் அப்பலகைகள் கழற்றி அகற்றப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. அதற்கமைய உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கிடையில், இன்று (24) பாராளுமன்றத்தில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.