தொல்பொருள் திணைக்கள பெயர்ப் பலகைகளை அகற்றியோர் கைதாவர்கள்!
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று இதனை தெரிவித்தார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தொல்பொருள் இடம் என்ற பெயர்ப் பலகை
கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் இடம் என்ற பெயர்ப் பலகைகளை சனிக்கிழமை மாலை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கிரான் பிரதேசத்தில் குடும்பிமலை உட்பட்ட மலை பிரதேசங்கள் பழமை வாய்ந்த ஆலயங்கள் வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் சமூக ஆர்வலர்கள் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர் உபதவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து அவற்றினை அகற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜேபால வடக்கு ,கிழக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே சட்டம் தானென்றும் அதனை எவரும் மீறக்கூடாதென்றும், ஏற்கனவே பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.