எம்.பிகள் ஓய்வூதிய ரத்து சட்டமூலம் ; உயர்நீதிமன்றை நாடிய முன்னாள் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் இரண்டு விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (இரத்து) சட்டமூலம் கடந்த 7 ஆம் திகதியன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமானால், முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமைகள் முற்றாக இல்லாது செய்யப்படும்.
இநதநிலையில், 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த எம்.எம். பிரேமசிறி, நவரத்ன பண்டார, நிஷாந்த தீபால் குணசேகர மற்றும் சமன் சிறி ஹேரத் ஆகியோரால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 1988 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பியசோம உபாலி மற்றும் 1988 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய உபாலி சரத் டன்ஸ்டன் அமரசிறி ஆகியோரால் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் தமது மனுவில், “5 முதல் 35 ஆண்டுகள் வரை தமது முழு வாழ்வையும் பொதுச் சேவைக்காக அர்ப்பணித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த ஓய்வூதியத்தை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர்.
ஓய்வுபெற்ற உறுப்பினர்களும் சில மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமாரும் தமக்குக் கிடைக்கும் சுமார் 60,000 முதல் 80,000 ரூபா வரையிலான ஓய்வூதியத்தை வைத்தே மருத்துவ மற்றும் அடிப்படைச் செலவுகளைக் கவனித்து வருகின்றனர்.
இந்தத் தொகை தற்போதைய நிலையில் போதுமானதல்ல. எனவே, இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்பதால், இதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற 'சர்வசன வாக்கெடுப்பு' அவசியம் என அறிவிக்க வேண்டும்” என கோரியுள்ளனர்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் மீதான வாதங்களை ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ முன்வைக்கவுள்ளார்.