சோதனைக்கு சென்று குற்றத்தை மறைக்க ஐடியா கொடுத்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் !
மொனராகலை - தனமல்வில நிக்கவாவ தெம்மோதர குளத்திற்கு அருகில் கஞ்சா சாகுபடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு அதிகாரிகள் கைது
கஞ்சா சாகுபடி தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, ஒரு கஞ்சா செடியை மாத்திரம் அழித்துவிட்டு ஏனைய செடிகளை அகற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மற்றொரு சந்தேகநபரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரிகள் கஞ்சா செடிகளை உலர்த்துமாறு தமக்கு அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.