தமிழ் அரசு கட்சி பொதுக்குழு கூட்ட குழப்பம் : குகதாசன் குழுவினரால் தாக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய, பொதுக்குழு கூட்டங்களில் போது, இரா. சம்பந்தன் ஆதரவாளரான ஒருவரை தாக்கிய குகதாசன் ஆதரவாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தாக்கப்பட்டவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சி. சிறிதரன் எம்.ஏ.சுமந்திரன் தலைமை போட்டியினால் பிளவடைந்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின், மத்திய மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.
இதன் போது, செயலாளர் பதவியை கைப்பற்றிவதில் எம். ஏ சுமந்திரன் அணி குறியாக இருக்க, குழப்பம் ஏற்பட்டது.
புதிய செயலாளர் பதவிக்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றதை அடுத்து அதற்கு ஆதரவாக 112 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இதன்போது கூட்ட ஏற்பாட்டுக்காக குகதாசன் அழைத்து வந்த தொண்டர்கள், வாகன சாரதிகள் உள்ளிட்டவர்களும் கையை உயர்த்தியதாக மற்றைய தரப்பினர் குற்றம் சுமத்தினர்.
இந்த தீர்மானத்தை 104 பேர் எதிர்த்தனர். முன்னதாக மத்தியகுழு கூட்டத்தின் போது, செயலாளர் மட்டக்களப்பை சேர்ந்த சிறிநேசனை நியமிக்க பிரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக குகதாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய குழுவில் புதிய நிர்வாகிகள் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு, அதை தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா, பொதுக்குழுவில் வாசித்தார்.
செயலாளராக குகதாசனை நியமிப்பதாக அவர் வாசித்த போது, திருகோணமலையை சேர்ந்த பலர் எதிர்த்தனர்.
அந்த நியமனத்தை ஏற்க முடியாது என்றும், பொதுக்குழுவை எதற்காக கூட்டினீர்கள் என கேள்வியெழுப்பினர்.
இந்த நியமனங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும், பலர் ஆத்திரமடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நியமனங்களை பொதுக்குழு ஏற்கவில்லையென்றும், ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பை நடத்துங்கள் என்றார்கள்.
பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தாமல், மத்தியகுழுவில் பரிந்துரைக்கப்பட்ட குழுவை நியமித்தால், தாம் கட்சியின் செயற்பாடுகளில் இரந்து ஒதுங்கிவிடுவோம் என பலர் எச்சரித்தனர். மட்டக்களப்பு பிரமுகர்கள் பலர் மேடையேறி சென்று, தலைவர் மாவையை நேருக்கு நேராக எச்சரித்தனர்.
“இது தான் உங்கள் நியமனமெனில், உங்களில் யாருக்காவது முடிந்தால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் அரசு கட்சியின் பெயரை சொல்லி அரசியல் செய்து கட்சியை வளர்த்து பாருங்கள்” என சவால் விட்டனர்.
இதன் போது, அம்பாறை முன்னாள் எம்.பி கோடீஸ்வரனும் மேடைறி சென்று எதிர்ப்பு தெரிவித்தார்.
குகதானின் நியமனத்துக்கு திருகோணமலையை சேர்ந்த பத்திரிக்கையாளரும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான தர்சன் என்பவரும் எழுந்து நின்று குகதாசனின் நியமனத்துக்க எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட குகதாசன் ஆதரவாளர் ஒருவர் ஓடிவந்து தம்மை தாக்கி விட்டு தப்பியோடியதாக குறிப்பிட்டனர்.
தம்பலகாமம், குளக்கோட்டன் பாடசாலை அதிபரான விஸ்ணுவர்த்தன் என்பவரே தம்மை தாக்கிதாகவும், இன்று காலை அவருக்கு எதிராக திருக்கோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசசபையொன்றின் தலைவராக பதவிவகித்த ஒருவரும், சம்பந்தன் ஆதரவாளர்களை தாக்குவதை போல மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என புதிய தலைவர் சி.சிறிதரன் மேடையில் அறிவித்தார்.