இந்திய அணிக்கு இலக்கு என்ன? : இங்கிலாந்து அணியால் ஒரு போட்டியை கூட ஜெயிக்க முடியாது
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்கள் சேர்த்திருந்தது.
இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஓலி போப் 148 ரன்களும், ரெஹான் அஹ்மத் 16 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து 4வது நாள் ஆட்டத்தை போப் - ரெஹான் அஹ்மத் கூட்டணி தொடங்கியது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் பும்ரா கூட்டணி அட்டாக் செய்தது.
இன்றைய நாளின் 2வது ஓவரிலேயே போப் 150 ரன்களை கடந்து அசத்தினார்.
தொடர்ந்து ரன்கள் சேர்ப்பதில் இருவரும் தீவிரமாக இருந்தனர். இதனால் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசப்பட்டது.
இந்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரெஹான் அஹ்மத் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த டாம் ஹார்ட்லி, போப்பிற்கு ஆதரவாக கம்பெனி கொடுத்தார்.
இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர். இதனிடையே போப் கொடுத்த கேட்சை கேஎல் ராகுல் தவறவிட, இங்கிலாந்து அணியின் முன்னிலை 200 ரன்களை கடந்தது.
இதனால் இந்திய அணி வீரர்களின் முகத்திலேயே பதற்றம் அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் பவுண்டரிகளை விளாச விடக்கூடாது என்று ஃபீல்டர்கள் அதிகமாக 30 யார்ட் வளையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டனர்.
இந்திய அணியின் டிஃபென்சிவ் ஆட்டம் காரணமாக டாம் ஹார்ட்லி - போப் இருவரும் எளிதாக ரன்களை சேர்க்க தொடங்கினார். இந்த நிலையில் 100வது ஓவருக்கு பின் அஸ்வின் அட்டாக்கில் வந்தார்.
அவர் வீசிய முதல் பந்திலேயே டாம் ஹார்ட்லி 34 ரன்களில் போல்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மார்க் வுட் அடுத்த ஓவரிலேயே டக் அவுட்டாகினார். இதனிடையே போப் 196 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
அவர் இரட்டை சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின்னர் பும்ரா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே போப் போல்டாகி வெளியேறினார். இதனால் இரட்டை சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதேபோல் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.