யாழில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைக்கு தடை ; பல வணிக நிலையங்கள் முற்றுகை!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை முற்றுகையிட்ட பொலிஸார், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

செய்மதித் தொலைக்காட்சி பார்ப்பதோ , பணம் செலுத்துவதோ குற்றம்
இலங்கை சுற்றுலா இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இலங்கைக்குள் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பதோ அல்லது அதற்காகப் பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, சன் டைரக்ட்,வீடியோகான்,டாடா பிளே,டிஷ் டிவி போன்ற சேவைகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதச் சேவைகள் ஊடாக, இலங்கையிலிருந்து மில்லியன் கணக்கான ரூபா பணம் உத்தியோகபூர்வமற்ற வழிகளில் இந்தியாவிற்குப் பரிமாறப்படுவதாகவும், இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சேவைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி, அவற்றை வீடுகளில் பயன்படுத்தும் நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பொலிஸாருக்குப் பணித்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.