சுற்றுலா விசாவில் பெண்ணை அனுப்பியவர் கைது!
தம்புள்ளை பெண் ஒருவரை சுற்றுலா விசா ஊடாக டுபாய் நாட்டுக்கு தொழிலுக்கு அனுப்பிய வெளிநாட்டு முகவர் நிறுவன உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில்,
சுற்றுலா விசா ஊடாக டுபாய் நாட்டுக்கு வீட்டுப்பணிப்பெண் சேவைக்கு அனுப்பிய பெண்கள் 85பேரை டுபாயில் துன்புறுத்தும் அறை ஒன்றில் அடைத்து வைத்திருப்பதாக ஊடகங்களில் பிரசாரமான செய்தி தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன் பிரகாரம் பணியகத்தின் விசாரணைப்பிரிவு குழுவொன்று தபுள்ளை பிரதேசத்துக்கு சென்று, குறித்த முகவர் நிறுவன உரிமையாளர் மற்றும் டுபாயில் சித்திரவதைக்கு ஆளாகிய நிலையில் நாட்டுக்கு வந்து, இந்த கதவல்களை ஊடகங்களுக்கு வழங்கிய பெண் ஆகியோரை அழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
முகவர் நிறுவன உரிமையாளர் கைது
அதன் பின்னர் குறித்த வெளிநாட்டு முகவர் நிறுவன உரிமையாளரை கைதுசெய்து தபுள்ளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் குறித்த நபரை அடுத்த மாதம் 3ஆம் திகதிவரை சிறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இருந்தபோதும் இந்த சம்பவத்துக்கு காரணமான குறித்த பெண் 2022.05.23ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்லும்போது, தொழிலுக்காக வெளிநாடு செல்வதில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது வெளிநாட்டு சுற்றுலாவுக்கான செலவுகளை அவரின் சகோதரர் மற்றும் சகோதரி ஏற்றுக்கொள்வதாகவும் 2022. 06.07 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் உண்மை தகவல்களை மறைத்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளதுடன் சட்ட விரோமான முறையில் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளதன் மூலம் பணியகத்தின் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளார்.
எனவே குறித்த பெண் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.