கொடூர விபத்தில்14 வயது சிறுமியின் கால் அகற்றம் ; சட்டவிரோதமாக கெப் செலுத்திய மாணவன் மீது விசாரணை தீவிரம்
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் சிறிகல, கிரிமண்டல சந்திக்கருகில் இடம்பெற்ற கொடூரமான விபத்தில் 14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் தீவிரமாகக் காயமடைந்ததுடன், தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக விசாரணை
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொனராகலை திசையிலிருந்து ஒப்பேகொட நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும், எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியும், அவரது 47 வயதுடைய தந்தையும் படுகாயமடைந்தனர்.
இருவரும் ஆரம்பத்தில் மொனராகலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமியின் ஒரு கால் கடுமையாக சேதமடைந்த காரணத்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, அவரது தந்தை தொடர்ந்து மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கெப் வாகனத்தின் சாரதி 17 வயதுடைய பாடசாலை மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் மொனராகலை, மந்துருகெட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மாணவனிடம் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லையெனவும், இலகுரக வாகனங்களுக்கான பயிற்சி உரிமம் (Learners Permit) மட்டுமே இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த உரிமத்தின் கீழ் கெப் ரக வாகனத்தைச் செலுத்த சட்டபூர்வ அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெப் வாகனத்தை அதிவேகமாகவும், அலட்சியமாகவும், ஆபத்தான முறையிலும் செலுத்தியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவன் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் மைனர் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.