வெளிநாட்டு வேலை ஆசை பயன்படுத்தி மோசடி ; அதிரடியாக கைதான இரண்டு பெண்கள்
பிரித்தானியாவில் பண்ணையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்களை ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கணேமுல்லை மற்றும் தம்புத்தேகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த கைது நடவடிக்கை, ஹொரணையைச் சேர்ந்த முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் மனித வள முகாமையாளராகப் பணியாற்றும் நபர் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 04ஆம் திகதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைகளின் படி, பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவரின் அறிமுகத்தின் மூலம் “தூல்லாவ” என அழைக்கப்படும் பிரதான சந்தேக நபருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவர், தன்னிடம் இரண்டு காய்கறி பண்ணைகள் மற்றும் 11 உணவகங்கள் உள்ளதாகக் கூறி, வேலை வாய்ப்பு வழங்குவதற்காக 1 கோடி 20 இலட்சம் ரூபாய் தேவைப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், உண்டியல் முறையில் பணத்தை பெற்றுக்கொள்ள இலங்கையிலுள்ள பலரது வங்கிக் கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும், கம்பளை, கடுவலை, கணேமுல்லை, தம்புத்தேகம மற்றும் கொத்தட்டுவ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நபர்களின் பெயரில் பல தடவைகள் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கம்பளை பகுதியிலுள்ள ஒரு துறவிக்கு உதவி செய்வதாகக் கூறி, முறைப்பாட்டாளரிடம் இருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணமும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணம் பெற்றுக்கொண்ட சில மாதங்களுக்குப் பின்னர், பிரதான சந்தேக நபர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது பிள்ளைகள் அனுப்புவது போன்ற குறுஞ்செய்திகள் மூலம் மேலும் ஏமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.