யாழில் நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி, சகோதரன் மீது கணவன் கத்திக்குத்து
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இன்று (27) இந்த வழக்கு விசாரணைக்காக மனைவியும் அவரது சகோதரனும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது, வழியில் மறைந்திருந்த கணவன், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து இருவர் மீதும் கத்தியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி மற்றும் அவரது சகோதரன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.