தாய்லாந்து விமான நிலைய மோதல் சம்பவம் ; ஸ்ரீலங்கன் உயரதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை
தாய்லாந்தின் பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பிராந்திய முகாமையாளர் (Country Manager) உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி பேங்கொக் சுவர்ணபூமி வானூர்தி நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தி சேவை குழுவினர் பயணிகளுக்கான பதிவுகளை (Check-in) மேற்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
இதன்போது, பயணிகள் பதிவுப் பகுதிக்குள் நுழைந்த பிராந்திய முகாமையாளர், அங்கிருந்த வானூர்தி சேவை குழுவினர் மற்றும் நிலைய முகாமையாளருடன் (Station Manager) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த ஒழுங்கீனச் செயல் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடியாக பெங்காக் வானூர்தி நிலைய காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது தாய்லாந்து அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பிராந்திய முகாமையாளரின் செயல் சட்டவிரோதமானது, தேவையற்றது மற்றும் நிறுவனத்தின் ஒழுக்க விதிகளுக்கு எதிரானது என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ள நிர்வாகம், அவரை உடனடியாக இலங்கை திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான இது தொடர்பான முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெளிவுபடுத்தும் வகையிலேயே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த உத்தியோகபூர்வ விளக்கத்தை நேற்று (16) வெளியிட்டுள்ளது.