வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி ; தமிழீழவிடுதலை இயக்கத்தின் பேச்சாளர் உறுதி
வடகிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும் அதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தமிழீழவிடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (10) இடம்பெற்றதினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவது தொடர்பாக நாம் கலந்துரையாடியுள்ளோம். அந்தவகையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியூடாக தமிழ்த்தேசிய கட்சிகளோடு இணைந்து சபைகளை பலப்படுத்துவதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வடகிழக்கு எங்கும் பரந்துபட்ட அளவிலே தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்களோடு, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் தலைவர்கள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியாகவே வவுனியா மாநகரசபை அமையவேண்டும் என்பது எமது விருப்பம். எனவே அதன் அங்கத்துவ கட்சிகளின் பிரதிநிதிகளோடு எமக்கு கிடைத்த விகிதாசார ஆசனங்களை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் முடிவை எட்டுவோம்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து பயணிப்பது தொடர்பான முடிவுகள் எதுவும் இன்று எடுக்கவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக எமது தலைமைகுழு கூடி ஆராயவுள்ளது என்றார்.