முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது வழக்கு தாக்கல் செய்யும் சுமந்திரன்
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்புக்காக ஒத்திவைப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபகளுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது உத்தரவிற்கு 30ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகி வழக்காடியிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. அவரது சமர்ப்பணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையின்போது அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகக் கூறி, 36 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, முறையான ஆதாரங்கள் இல்லாததால் நீதிவான் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதே தகவல்களுடன், புதிதாக 30 பேருக்கு எதிராக பொலிஸாரால் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்காதவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரது உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டது.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ், பொது போக்குவரத்தைத் தடுத்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு நடைபெறுகிறது. முன்னர் தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவைப் புறக்கணித்து, முரண்பாடான இரண்டாவது உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
முதல் உத்தரவு கவனத்தில் கொள்ளப்படாமல் வழங்கப்பட்ட இந்த உத்தரவை அதே நீதிமன்றத்தால் மாற்ற முடியும் எனவும், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. வீதியை மறித்து போராட்டம் நடத்தியது சிறு விடயமாகும்.
இலங்கையில் இதுபோன்ற போராட்டங்கள் பொதுவானவை. சட்டம் இத்தகைய சிறு விடயங்களை கவனத்தில் கொள்ளாது. இவ்வாறு சிறு விடயங்களுக்காக வழக்கு தாக்கல் செய்வது, அனைவரின் நேரத்தையும், குறிப்பாக நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிப்பதாகும்.
எனவே, இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும். “ரணில் விக்ரமசிங்க வருகையின்போது வீதியை மறித்து போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுவது விநோதமான குற்றச்சாட்டு. அவரே ஜனாதிபதியாக வந்தபோது, தலைநகரில் பல இடங்களில் வீதிகளை மறித்து போராட்டங்கள் நடந்தன,” என வாதிடப்பட்டது.
புதிய, விநோதமான வழக்குகளைத் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணாக்கக் கூடாது என சமர்ப்பிக்கப்பட்டது. இச்சமர்ப்பணங்களைக் கேட்ட நீதிவான், வழக்கை ஏப்ரல் 30, 2025 அன்று உத்தரவுக்காக ஒத்திவைத்தார்.