தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; தனியார் கல்வி நிலைய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி
வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில், உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலை முதல் மதியம் 12 மணி வரை வகுப்பு நடைபெற்றுள்ளது.
உடற்கூறு பரிசோதனை
2025ஆம் ஆண்டு உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற மாணவி, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், பெற்றோரும் உறவினர்களும் அவரைத் தேடியுள்ளனர்.
தேடுதலின்போது, மாணவியின் புத்தகப்பை மற்றும் துவிச்சக்கர வண்டி கல்வி நிலையத்தில் காணப்பட்டன. மேலும், நிலைய வளாகத்தில் உள்ள கிணற்றருகே மாணவியின் செருப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மாநகர சபையினர், கிராம அலுவலர், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, மாலையில் மாணவியை சடலமாக மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியாவில் பிரபல மகளிர் கல்லூரியில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும், வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியாவார்.
மாணவியின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.