கபில சந்திரசேன மரணம் ; கண்டெடுக்கப்பட்ட மருந்துகள் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மரணமடைந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் தொடர்பான அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (08) புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகுப்பாய்வு அறிக்கைகள்
இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை விளக்குகையில், கபில சந்திரசேன உயிரிழந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில அடையாளம் தெரியாத மருந்துகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தனர்.
அத்துடன், மரணமடைந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான் பசன் அமரசேன, குறித்த மருந்துகள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்புமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பணிமனைக்கும் மற்றுமொரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக, வழக்கினை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.