சுரங்கப் பாதைகள் பயன்படுத்தாவிட்டால் அபராதம் ; கண்டியில் புதிய கடும் கட்டுப்பாடு
சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தாமல், முறைசாரா முறையில் பிரதான வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குக் கண்டி பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தாமல், ஆபத்தான முறையில் வீதிகளைக் கடப்பது தற்போது பாரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நகரத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காகப் பெருமளவிலான செலவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள் இருக்கும் நிலையிலும், சிலர் அவற்றை தவிர்ப்பதன் காரணமாக வீதி விபத்துக்களின் அபாயமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பாகக் கண்டி பொலிஸார் குறிப்பிடுகையில், சட்டவிரோதமான முறையில் வீதிகளைக் கடக்கும் நபர்களுக்கு எதிராகத் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதற்கமைய, பாதசாரி கடவைகள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் குழுக்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் கண்டி பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.