175 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட எஸ்எஸ்சி மைதானம்
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு SSC மைதானத்தில் பொருத்தப்படும் பேரொளி விளக்குகள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான 175 கோடி ரூபா செலவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) ஏற்றுக்கொண்டதாக ஊடகவியலாளர்கள் மத்தியில் SLC கௌரவ பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்தார்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் புனரமைப்புப் பணிகளை பார்வையிட வெள்ளிக்கிழமை (02) மாலை ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய கொடலியத்த, 'ரி20 உலகக் கிண்ண போட்டிகளை இந்தியாவுடன் கூட்டாக நடத்தும் வரவேற்பு நாடு என்ற வகையில் இலங்கை, ஐந்து உலகக் கிண்ணப் போட்டிகளை எஸ்எஸ்சி மைதானத்தில் நடத்தவுள்ளது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் முதலாவது போட்டியான பாகிஸ்தானுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான போட்டி எஸ்எஸ்சி மைதானத்தில் பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறும்' என்றார்.
இந்த மைதானத்தில் நடைபெற்றுவரும் புனர்நிரமாணப் பணிகள் யாவும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்திசெய்யப்பட்டு சில பயிற்சிப் போட்டிகள் நடத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த மைதானத்தில் நவீன போரொளி விளக்குள் பொருத்தப்படுவதன் மூலம் முதல் தடவையாக பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடியதாக இருக்கும். எதிர்காலத்தில் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இங்கு நடத்துவது குறித்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசித்து வருகிறது.
இந்த மைதானத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக செலவிடும் 175 கோடி ரூபா ஒரே ஒரு விடயத்திற்கான செலவாக கருதுவதை விடுத்து இலங்கை கிரிக்கெட்டின் நீண்ட கால திட்டத்துக்கான முதலீடாக கருதவேண்டும் எனவும் சுஜீவ கரலியத்த தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, வீரர்களுக்கான உடைமாற்று அறைகள் சர்வதேச தரத்திற்கு ஒப்பானதாக உயர்த்தப்படவுள்ளது. அத்துடன் போட்டி தீர்ப்பாளர், மூன்றாவது மத்தியஸ்தர்கள், ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கான புதிய அறைகள் ஆகியவற்றுடன் மைதானத்தில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது.