இலங்கையில் இணையவழி சூதாட்டத்திற்கு எதிராக அதிரடி ; 146 தளங்கள் முடக்கம்
இலங்கையில் இயங்கி வந்த 146 அனுமதியற்ற இணையவழி சூதாட்ட இணையதளங்களை முடக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
சட்டவிரோத இணையத்தள சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இணையதளங்களை இலங்கைக்குள் அணுக முடியாத வகையில் தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை வழங்கிய அறிவித்தலின் அடிப்படையிலேயே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18ஆம் பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிய அனுமதிப் பத்திரமின்றி இலங்கைக்குள் இணையவழி சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது அவற்றை ஊக்குவிப்பது, சட்டத்தின் 44ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களை சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறையற்ற சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கமும் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.