முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம் ; ஜனாதிபதி யோசனை
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்பப்படைகளினாலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை ஒருங்கிணைத்து, ஒரே தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யோசனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் 2027ஆம் ஆண்டிற்கான பாதீட்டுக்கு முன்னாயத்தமாக, ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையின் இலக்குகளை மேலும் திறமையாகவும் வினைத்திறனுடனும் அடைவதற்கு இத்தகைய ஒருங்கிணைந்த மையம் வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும், உலகளாவிய புதிய சவால்களை எதிர்கொள்ளவும் பாதுகாப்புத் துறை நவீன தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாற வேண்டியதன் அவசியம் குறித்தும், நவீன தொழில்நுட்ப சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், பாதுகாப்புப் படையினரின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவைப்பெறுவதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் வெளிநாட்டுப் பயிற்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பிக்கப்படவுள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செயற்பாடுகள் குறித்தும், இவ்விரு நிறுவனங்களுக்குமான தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
பாதுகாப்புப் படையினரின் உழைப்புப் பங்களிப்பின் மூலம் அவர்களைக் கட்டுமானத் துறையில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இந்தக் கலந்தரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.