இலங்கை வரி வசூலில் புதிய சாதனை
2026ஆம் ஆண்டுக்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் இதுவரை 61 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வரி வருவாய் வசூல் சுமார் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான முழுமையான வரி வருவாய் இலக்கை எட்ட முடியும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, இதுவரை சுமார் 12 இலட்சம் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1,30,000க்கும் அதிகமான நிறுவனங்கள் வரி செலுத்துவதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.