சர்வதேச நெருக்கடியின் தாக்கம் ; அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம்
உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்வடையக்கூடும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சர்வதேச சந்தை மாற்றங்களின் பிரதிபலிப்பாக, கடந்த சில நாட்களில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனியின் விலை சுமார் 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.