கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி விடுவிக்க முடியாது
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தனர்.

இக் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில் கோரியிருந்தது அதற்கமைவாக பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி செயலகத்திறகு வழங்கிய பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த காணியையும் கட்டடத்தையும் விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிக்கையளித்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P. வீரசிங்க கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு தெரிவித்துள்ளார்.
2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும் கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த காணிக்கு ஒரு பறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரமே விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.