கல்கிசை துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேகநபர் கைது
கொழும்பிலுள்ள கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) மாலையில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இதுவரை இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
அன்றைய தினம் இரவே, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து இந்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் ரீவோல்வர் ரகத் துப்பாக்கி ஒன்று, 12 தோட்டாக்கள் மற்றும் 6 வெற்றுத் தோட்டாக்கூடுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 32, 35 மற்றும் 28 வயதுடைய கொழும்பு 14, கொழும்பு 12, தளுபொத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், பெண் சந்தேகநபர் 28 வயதுடைய குரண பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.