கோட்டாபய போல் செயற்படுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு கோரிக்கை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) செய்த விடயங்களை கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமக்கான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவ்வாறு செய்வதன் மூலம் அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் பெருமளவில் குறைக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இந்த விடயம் தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இருப்பினும் அவர்களது இந்த திட்டம் தொடர்பாக ஜனாதிபதியிடமிருந்து குறிப்பிட்ட பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.