வட மாகாண கல்வி அதிகாரிகள் மீது நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு
வட மாகாண கல்வி அதிகாரிகள், வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்டோரின் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக ஆசிரியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எதிர்காலத்தில் கடுமையான அடிப்படை உரிமை மீறல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் “சேவையின் தேவை கருதிய இடமாற்றம்” என்ற பெயரில் கல்வி துறையை பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டினார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படாமல், 193 ஆசிரியர்களுக்கு ஜனநாயக விரோதமான மற்றும் சர்வாதிகாரமான முறையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்குவிதிக்கோவையின் 188வது பிரிவின்படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள திணைக்களங்களில் கட்டாயமாக இடமாற்றச் சபை அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், “சேவையின் அவசரத் தேவை” காரணமாக மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், அவை அடுத்த வருடாந்த இடமாற்றம் வரை ஒத்திவைக்க முடியாத நிலைமை என்பதை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இடமாற்றச் சபை வழிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் அதிகார துஷ்பிரயோகமும் சட்டவிரோத பழிவாங்கல் செயற்பாடுகளுமாக உள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்.
இதற்கெதிராக யாழ் மாவட்ட உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் ஆசிரியர்கள் முறையிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் வட மாகாண ஆளுநரால் 25க்கும் மேற்பட்ட இடமாற்றங்கள் இடமாற்றச் சபை தீர்மானங்களை மீறி தன்னிச்சையாக நிறுத்தப்பட்டதாகவும், 2026 ஆம் ஆண்டிலும் தீவகம் மற்றும் வடமாராட்சி கிழக்கு போன்ற பகுதிகளில் சட்டவிரோத இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களை இதுவரை சம்பந்தப்பட்ட பாடசாலைகளிலிருந்து விடுவிக்காமல் கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.