வீடுகளுக்குள் மட்டும் நினைவேந்துங்கள்; வெளியில் வேண்டாம்
போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
வடக்கு கிழக்கெங்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே சரத் வீரசேகர மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊர்திப் பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் தேவையில்லை
அரசு நினைவேந்தல்களுக்கு அனுமதி வழங்குவதால் புலிப் பயங்கரவாதிகளையும் தமிழ்த் தரப்பினர் நினைவேந்தி வருகின்றனர். அத்தகைய நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
போரில் இறந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்த வேண்டுமெனில் அவர்கள் தங்களது வீடுகளுக்குள் அதனைச் செய்ய முடியும். அதைவிடுத்து ஊர்திப் பேரணிகள் மூலமும் கஞ்சிகள் வழங்கியும் பொது இடங்களில் விளக்கேற்றியும் வழிபடவேண்டிய அவசியமில்லை.
மேலும் எதிர்காலத்தில் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்தார்.