நாட்டின் பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை ; 150 மி.மீ வரை கடும் மழை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'சிவப்பு' (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது இன்று (26) பிற்பகல் 03.45 மணி வரை செல்லுபடியாகும்.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, நேற்று (25) காலையளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.