வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும் ; மன்னார் மறைமாவட்ட ஆயர் சுட்டிக்காட்டு
தற்போதைய அரசாங்கம் மன்னார் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தவக்காலத்தை முன்னிட்டு எழுதிய திருமடலில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
குறித்த திருமடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலிகளில் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் வாசிக்கப்பட்டது.

அந்த திருமடலில் அவர் வலியுறுத்திய முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த தேர்தல் பிரசார காலத்தில் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மன்னார் மக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மக்களின் எதிர்பார்ப்புகளும் காத்திருப்பும் தொடர்கதையாகவே உள்ளன. தமிழ் மக்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் காலம் தாழ்த்துவது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், குறிப்பாக மீனவர் சமூகத்தினர் எதிர்நோக்கும் பாரிய தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களில் அரசு அதிக அக்கறையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடையச்சட்டத்தை (PTA) முழுமையாக நீக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக புதிய சட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும்.
பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி அமைத்துள்ள அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறாத நிலையில் உள்ளன.
இந்த விடயங்களில் அரசு உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆயர் தனது திருமடலில் வலியுறுத்தியுள்ளார்.