சர்ச்சையை ஏற்படுத்திய மதபோதகர் தொடர்பில் ஜனாதிபதி கடும் சீற்றம்; பறந்த உத்தரவு!
மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை தொிவித்த போதகர் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பற்ற கருத்துக்கள்
போதகரின் பொறுப்பற்ற கருத்துக்கள் மத முரண்பாடுகளை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி உடண்டியாக அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார் .
ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.
ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் கூறிய கருத்து தொடர்பான காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
போதகர் வெளியிட்ட கருத்துக்கள் புத்தரையும் மற்ற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுந்தன.
பிக்குகள் முறைப்பாடு
அதேவேளை ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகரின் இந்த கருத்துக்கு எதிராக நவ பிக்கு பெரமுன நேற்று (15) கோட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
மதப்போராட்டம் ஏற்படுவதற்கு முன்னர் போதகரை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறும் பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்த போதகருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு கோரி பிவித்துரு ஹெல உறுமய குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.