ட்ரம்பை கொல்ல சதி; ஈரானின் உளவாளி குற்றவாளியாக அறிவிப்பு
ட்ரம்பை கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய 47 வயதான பாகிஸ்தான் பிரஜை , நியூயோர்க்கின் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரானிய புரட்சிகர காவல்படையின் பயிற்சி பெற்ற உளவாளியான இவர், 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கம்
தனது விசாரணையின் போது, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் தூதுவர் நிக்கி ஹேலி ஆகியோரைக் கொலை செய்யத் தனக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிற்கு வருகை தந்த ஆசிப் மெர்ச்சண்ட் என்ற இந்த நபர், நியூயோர்க்கில் வைத்து வாடகைக்குக் கொலையாளிகளை அமர்த்த முயன்றபோது, கொலையாளிகள் எனத் தவறாக நம்பி அமெரிக்க உளவுத் துறையினரை சந்தித்துள்ளார்.
இதன் மூலம் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் அவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்த மெர்ச்சண்ட், ஈரானிலுள்ள தனது உறவினர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இதற்குச் சம்மதித்ததாகவும், எவரேனும் கொல்லப்படுவதற்கு முன்னரே தாம் கைது செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்து அமெரிக்க அரசுடன் ஒத்துழைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாத முயற்சி மற்றும் கொலைக்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாக அறிவித்ததுடன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது