உளவுத்துறையை பலவீனப்படுத்துகிறது அரசாங்கம் ; நாமல் பகிரங்க குற்றச்சாட்டு
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பங்களித்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையை பலவீனப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கெகிராவ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதிலும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றிய உளவுத்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அதேநேரம், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தைப் போன்று உளவுத்துறை அதிகாரிகளைக் கைது செய்யும் இவ்வாறான நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர்குலைத்து தீவிரவாத சக்திகள் மீண்டும் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.