யாழ் நல்லூர் பிரதேச சபையின் அதிரடி உத்தரவு
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும், நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், உப தவிசாளர் ஜெயகரன், சபையின் உறுப்பினர்கள், சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் 2026 ஜனவரி 01 முதல் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

1. நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் லஞ்சீற் முற்றாகத் தடை செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் 2026 ஜனவரி 01 முதல் உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என்பன உணவுப் பரிமாற்றத்தின் போது லஞ்சீற் பயன்படுத்த முடியாது.
2. திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வருகைதருவோர் தங்களுடைய வாகனங்களை பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நிறுத்துவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மண்டப உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதோடு அதனைக் கண்காணிக்கவும் வேண்டும்.
3. உணவுகளைத் தயாரித்தல், கையாளுதல் ஆகியவற்றில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
4. உணவகங்கள், விடுதிகள், விருந்தகங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் கட்டணகழிவகற்றல் முறைமையின் கீழ் தங்களை உடன் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கான வியாபார உரிமங்கள் ரத்து செய்யப்படும்
5. நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆளுகைப்பகுதியில் இன்னமும் பதிவு செய்யப்படாத உணவகங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை நடாத்துபவர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
6. விடுதிகளை நடாத்துகின்ற விடுதி உரிமையாளர்கள் தங்களுடைய விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு கழிவகற்றல் தொடர்பில் அறிவித்தல்கள் வழங்க வேண்டியதுடன் அவர்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை இடுவதற்கு வசதியாக தங்களுடைய விடுதிகளில் கழிவுத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும்
7. குறித்த விடயங்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனவா என்பதனை சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் நேரில் கண்காணித்து அறிக்கையிடுவர்.
8. குறித்த அறிவித்தல்களை மீறிச் செயற்படும் உணவகங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.