நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு வகையிலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை சுட்டிக்காட்டி, சில தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி வருவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எந்தவொரு வகையிலும் அரசாங்கம் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்றைய அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. 50,000, 60,000, 100,000 என எந்தவொரு தொகையாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் குறித்தளவிலான எரிபொருள் அளவு உள்ளது.
அந்த லீற்றர் அளவுக்கு அமைவாக அது ஒரு படியாகச் சேர்க்கப்படுகிறது.
இது பொதுவாக அந்த நேரத்தில் நிலவும் எரிபொருள் விலைக்கு ஏற்பவே கணக்கிடப்படுகிறது.
ஆனால் 2026 மார்ச் மாதத்திற்குப் பிறகு எரிபொருள் விலை அதிகரிப்புடன் இந்த அளவைக் கணக்கிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வழங்கியிருந்தால் அது ஒரு பாரிய அதிகரிப்பாக இருக்கும்.
எனவே 2026 மார்ச் 1 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே கணக்கீடுகள் செய்யப்பட்டன.
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் வரை நிலவிய எரிபொருள் விலைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் கணக்கிட்டிருந்தால் இதை விட அதிக தொகை வழங்க வேண்டியிருக்கும்.
ஆனால் நாங்கள் மார்ச் 1 ஆம் திகதி நிலவிய விலையின் அடிப்படையில் கணக்கிட்டோம், அந்த சுற்றறிக்கையை நாங்கள் ஜூலை 1 ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவந்தோம். ஜூலை 1 ஆம் திகதி முதல் கணக்கிடப்படுவது, அந்த நாளில் சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்பவே ஆகும்.
குறைந்தால் குறையும், அதிகரித்தால் அதிகரிக்கும். அதற்கமைய எரிபொருள் விலை அதிகரித்ததால் அந்த மேலதிக தொகை கணக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்றார்.