குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை
தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, நேற்று (24) மாலை இது குறித்துத் தெரியவந்ததாகவும், அதற்கமைய உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், குறித்த இரசாயனப் பொருட்கள் நச்சற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் மேலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த இந்த அவசர நிலைமை காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், பின்னர் முப்படையினரின் ஒத்துழைப்புடன் அந்தச் நிலைமை சீர்செய்யப்பட்டதாகவும், அதற்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைக்கு அமைவாக, ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அது குறிப்பிட்ட தரநிலைகளுக்கு அமைய உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.