யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மக்களால் மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கடந்த வாரம் மன்னார் கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்று யாழிலும் இடம்பெற்றுள்ளது.
காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவரை நீண்ட நேரமாக ஒருவர் அவதானித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல் தொடர்பாக பல கருத்துக்கள் வெளிவரும் நிலையில் குறித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.