புலம்பெயர் தமிழர்களால் மகிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்
போருக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஊக்குவித்த ஜே.வி.பி., அவரது சலுகைகளைக் குறைப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் அச்சுறுத்தல்களுக்கு அவரை ஆளாக்கக்கூடாது என ஜே.வி.பி.யின் முன்னாள் அரசியல் குழு உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர்கள் பலரின் தூண்டுதலின் பேரில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழ் பிரிவினைவாத இயக்கங்களின் இலக்கு
இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் பிரிவினைவாத இயக்கங்களின் இலக்காக மாறக்கூடும் என்பது மிகவும் கவலைக்குரியதாகும். இது தொடர்பாக அரசாங்கம் எங்கள் கருத்துக்களை புறக்கணிக்காது என்று நான் நம்புகிறேன்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு ஜே.வி.பி. ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் கூட்டமைப்பை உருவாக்கியது. ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவை படுகொலை செய்த தோரதெனிய அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செம்மணிப் புதைகுழியை அகழ்வதில் அதிக ஆர்வம் காட்டும் அரசாங்கம், தற்போது சூரியகந்த மற்றும் ஹோகந்தர புதைகுழிகளிலும் இதேபோன்ற ஆர்வத்தைக் காட்டியுள்ளது.
2010 ஆம் ஆண்டில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஜே.வி.பி. ஆதரித்து அவரை ஆட்சிக்கு கொண்டுவர பிரசாரம் செய்தது. சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்திருப்பார்.
திருகோணமலையில் ஜே.வி.பி இயக்கத்தை சரத் பொன்சேகாவே அடக்கினார். பிரிவினைவாத இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்த்து வைத்தார்.
ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சோசலிசத்தை நோக்கிய போராட்டத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டோம், இதன் அடிப்படையிலேயே நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை உருவாக்கினோம்.
அதில் ஜே.வி.பியினர் பலர் அமைச்சரவை பொறுப்பைகொண்டிருந்ததாகவும் ஜே.வி.பி.யின் முன்னாள் அரசியல் குழு உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.