வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இலங்கைக்கு கனமழை எச்சரிக்கை ; நாகமுத்து பிரதீபராஜா தகவல்
மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த தாழமுக்கம் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில், பங்களாதேஷ் வழங்கியுள்ள ‘அர்னாப்’ (Arnap) என்ற பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்கம்
எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இலங்கைக்கு நேரடியான புயல் தாக்கம் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும், அதன் மறைமுக தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் நிறைந்த காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக செப்டெம்பர் 19 முதல் 23ஆம் திகதி வரை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காணப்படும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செப்டெம்பர் 20 முதல் 23ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை நிலைமைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கத்தால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதால், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழை மற்றும் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதை பல்வேறு வானிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் வானிலை மாற்றங்கள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதுடன், கடற்றொழிலாளர்கள் கடல் நிலைமை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.