டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்; தமிழர் பகுதியில் பொலிஸாரிடம் சிக்கிய தனியார் பேருந்துகள்
கந்தளாய் பொலிஸார் நடத்திய சோதனையில், டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (12) மாலை நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட இரண்டு பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிகளும் கைது
கண்டியிலிருந்து திருகோணமலைக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்தப் பேருந்துகள், கந்தளாய் - போட்டான்காட்டு சந்திப்பில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன.
பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட பின்னர், பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.