இலங்கையில் பொலிஸ் உயரதிகாரிகளாக ஆள்மாறாட்டம் ; மக்களே அவதானம்
உயர் பொலிஸ் அதிகாரிகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து, வட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகள் ஊடாக பண மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போலி கணக்குகள்
மோசடியாளர்கள் உயர் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி வருகின்றனர்.
பின்னர் தொலைபேசி அழைப்புகள், வட்ஸ் -அப் செய்திகள் மற்றும் டெலிகிராம் ஊடாக பொதுமக்களைத் தொடர்பு கொள்கின்றனர்.
பாதிக்கப்படுபவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்டோ, அவர்களிடம் இருந்து பணம் அல்லது நிதி பங்களிப்புகளை மோசடியாளர்கள் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூக ஊடக தளங்கள், செய்தி பரிமாற்ற செயலிகள் அல்லது தனிப்பட்ட கணக்குகள் ஊடாக பணம் கோருவதில்லை என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு இத்தகைய ஊடகங்கள் வழியாக யாராவது தொடர்பு கொண்டால் அவர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் வரும் இத்தகைய தொடர்பாடல்களை உடனடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான மோசடிகளை எதிர்கொள்ளும் பொதுமக்கள், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.