சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை ; இருவர் கைது
கல்கிஸ்ஸை, மொரட்டுவை, பிலியந்தல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து விநியோகித்து வந்த நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அவ்விடத்திலிருந்து சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 135 லீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட், 08 பீப்பாய்களில் அடைக்கப்பட்டிருந்த மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 16,000 லீற்றர் கோடா (Goda) மற்றும் பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கரதியான குப்பைக் கழிவு மேட்டிற்கு அருகிலுள்ள பொல்கொட ஆற்றிற்குச் சொந்தமான வேரஸ் கங்கைத் தீவில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சப்படுவதாக கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்மலானை, தெலாவல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.