விஜய் குறித்து தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி பேச்சு
தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும், அதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புவதால் வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களான சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் ராமு ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் குறிப்பிடுகையில், "புதுச்சேரி காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், அந்தச் சிறப்பான விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது கண்டிக்கத்தக்கது.
வருங்காலத்தில் இதுபோன்று நிகழக் கூடாது. தமிழக முதல்வர் விஜய், அரச விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனக் கூறியது போல, புதுச்சேரி அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
பிரதமர் கூடத் தமிழ் தான் மூத்த மொழி எனக் கூறியுள்ளார். எனவே, அனைத்து அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும்; இல்லையெனில் வீதியில் இறங்கிப் போராடுவோம்.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் விரும்புகின்றனர். எனவே, வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் நினைக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.